தெலுங்கானா பிரச்சனை குறித்து பிரதமருக்கு விளக்கி கூறிய ஆந்திர ஆளுநர்

நிலைமை கைமீறிப் போய்விட்ட ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை தனியாக பிரிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இன்றோடு 27வது நாளாக தெலுங்கானா பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசும் தெளிவான நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள தெலுங்கானா பகுதிகளில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் நடிகர் சிரஞ்சீவி, கட்சி பொதுசெயலர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் நடந்து வரும் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி கூறியதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசிய ஆளுநர், மாநிலத்தின் தற்போதைய நிலையை குறித்து விளக்கி இருந்தார். தெலுங்கானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா ராஷ்ரா சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் ஏற்கனவே கேட்டு கொண்டார். ஆனால் இந்த பிரச்சனையில் முடிவெடுக்க மேலும் கால அவகசம் கேட்டதால், பிரதமரின் வேண்டுகோளை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சி?
போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதில் மாநிலத்தின் தெலுங்கானா மாவட்டங்கள் மற்றும் தலைநகர் ஹைதராபாத் முடங்கிப் போயுள்ளது. இப்போதுள்ள காங்கிரஸ் அரசால் இந்த சிக்கலை சமாளிக்கவும் முடியவில்லை. எனவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது சொந்த ஆட்சியை ஆந்திரத்தில் கலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications