தயாநிதி- கலாநிதி வீடுகள், அலுவலகம், சன் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்

ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ நேற்று எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தது.
இந்த முதல் தகவல் அறிக்கையில், மாறன் சகோதரர்கள் தவிர மேக்சிஸ் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 120 பி பிரிவு 13(2), 13 (1) (டி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7 ,12ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே பிரிவுகளின் கீழ் சன் டி.வி., மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ், அஸ்ட்ரோ நெட்வொர்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இன்று மாறன் சகோதரர்களின் சென்னை போட் க்ளப் வீடு, சென்னை அலுவலகம், ஹைதராபாத்-டெல்லி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதே போல சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன அதிபராக இருந்த சிவசங்கரன் தனது செல்போன் சேவையை விரிவாக்க 2ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு லைசென்ஸ் தர மறுத்த தயாநிதி, அவரது நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்தார்.
இதையடுத்து வேறு வழியின்றி தனது நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு ஆனந்த கிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.
இவ்வாறு ஏர்செல் பங்குகளில் பெரும்பாலானவை மேக்ஸிஸ் வசம் ஆன பின்னர், ஏர்செல் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் 2ஜி லைசென்ஸ் ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து சன் டிவியின் டிடிஎச் சேவையில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான South Asia Entertainment Holding Ltd நிறுவனம் ரூ. 625 கோடியை முதலீடு செய்தது.
மேலும் சன் எம்.எம். ரேடியோ நெட்வோர்க்கிலும் மேக்ஸிஸ் நிறுவனம் ரூ. 100 கோடியை முதலீடு செய்தது.
இந்த முதலீடுகள் எல்லாமே 2ஜி லைசென்சுக்காக மேக்ஸிஸ் தயாநிதி தரப்புக்கு தந்த லஞ்சம் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக ரால்ஃப் மார்ஷலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது, அதற்குக் கைமாறாக மாறன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்தாகக் கூறப்பட்டது.
இந்த 2ஜி ஸ்பெக்ரம் விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7ம் தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த ரெய்டுகள் குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை முடிந்த பிறகு, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.












Click it and Unblock the Notifications