ஜெ. மீது வன்கொடுமை வழக்கு போட வேண்டும்: இந்திய குடியரசுக் கட்சி
சங்கரன்கோவில்: அதிமுக அரசை அகற்றும் வரை ஓயமாட்டோம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் சாந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே சங்கரன்கோவில் வந்தார்.
சங்கரன்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சாந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியா சுதந்திரம் அடைந்த 64 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பரமக்குடியில் நடந்த தலித் படுகொலை போன்று வேறு எங்கும் நடந்ததில்லை. 3 பேரை துப்பாக்கியால் சுட்டும், 3 பேரை தாக்கியும் காவல்துறை கொலை செய்திருக்கிறது. தலித் சமுதாய மக்களை ஆதிக்க சக்திகள் காவல் துறை துணையுடன் பழி வாங்கி வருகிறது. இதற்கு காரணமான முதல்வர் ஜெயலலிதா மீது வன்கொடுமை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துவதுடன் பலியானவர்களின் குடுமபத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தலித் மக்களுக்கு விரோதமாக செயல்படும் கட்சிகளை ஒழிக்க மாற்று அணியை உருவாக்க வேண்டும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தலித் இனத்திற்கு என்று நாட்டில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும் பரமக்குடி சம்பவத்திற்கு யாரும் முழுமையாக போராடவில்லை. தலித் இன மக்களை அழிக்கும் வகையில் செயல்படும் தமிழகத்தின் இந்த அரசை அகற்றும் வரை இந்திய குடியரசுக் கட்சி போராடும் என்றார்.












Click it and Unblock the Notifications