உள்ளாட்சித் தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் இடைத்தேர்தலில் கவனம் செலுத்துகிறார்கள்- விஜயகாந்த்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து யாரும் கவலைப்படவில்லை, கவனம் செலுத்தவில்லை. மாறாக திருச்சி இடைத்தேர்தல் குறித்துதான் அத்தனை கட்சிகளும் கவலைப்படுகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேமுதிக வேட்பாளர் கோ.வேல்முருகமனை ஆதரித்தும், கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரை ஆதரித்தும் சென்னையில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
முக்கியக் கட்சிகள் எல்லாம், திருச்சி இடைத்தேர்தல் பணியில்தான் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் வேட்பாளர்கள் களம் காணும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் யாரும் கவனம் செலுத்தவில்லை.
சிங்காரச் சென்னையாக்குவேன் என்று கூறினார்கள். ஆனால் சென்னையில் உள்ள தெருக்களில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இதனால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாருக்கும் அக்கறை இல்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களைச் சந்தித்து வரும் கட்சிகள் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசிகளை செய்து தருவோம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவோம் என்று தேர்தலின்போது உறுதி தருகிறார்கள். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை.
நானோ, எனது கட்சியினரோ நிச்சயமாக லஞ்சம் வாங்க மாட்டோம். எனது கூட்டணி கட்சியினரும் அப்படித்தான். பணம் சம்பாதிப்பதற்காக எனது கட்சியினர் உங்களைத் தேடி வரவில்லை. உங்களுக்கு உழைக்க ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.
ஏழை, நடுத்தர மக்களின் கஷ்டங்களை அறியாமல், தேர்தல் சமயத்தில் மட்டும் கைகூப்பி வணங்குபவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். மக்களை ஆடு, மாடாக நினைப்பவர்களை மாற்ற வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் திட்டங்கள் முறையாக நடைபெறும் என்று நினைப்பது தவறு.
திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளின் நிதி தாராளமாக உள்ளது; எனவே எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள், ஒரு ஆண்டுக்குள் சென்னையை மாற்றிக் காட்டுகிறேன் என்று பேசினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications