தேர்தலில் மதுபாட்டில்கள், அன்பளிப்பு பெறுபவர்களுக்கு குண்டாஸ்- கலெக்டர் எச்சரிக்கை
மதுரை: உள்ளாட்சித் தேர்தலின் போது மதுபாட்டில்கள், அன்பளிப்பு பெறுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அருகே உள்ள மேலூர் ஒன்றிய பகுதிகளான நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் சகாயம் பார்வையிட்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.
அந்த பகுதிகளில் வாக்களிப்பதற்காக விருந்து வைத்தாலோ, மது பாட்டில்களோ, வேறு வகையான அன்பளிப்புகளோ வழங்கினால் அவற்றை வழங்கியவர்கள் மற்றும் வாங்கியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊமச்சிகுளத்தில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் வழியில் கொடியுடன் சென்ற வாகனம் ஒன்றையும், சர்வேயர் காலனியில் மொபைல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டி சென்றவரையும் மாவட்ட கலெக்டர் நிறுத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் சகாயத்தின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications