செல்போன் காதலர்கள் தற்கொலைக்கு முயற்சி-காதலி பலி, காதலர் 'சீரியஸ்'
நாகர்கோவில்: செல்போனில் காதல் வளர்த்த காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில், காதலி பலியானார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(29). வேன் டிரைவர். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் மகள் பிரிஸ்கா(22) என்பவருடன் கண்ணனுக்கு செல்போன் பேச்சு மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரிஸ்கா தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் குறித்து தெரிந்து கொண்ட பிரிஸ்காவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் கண்ணனை தொடர்பு கொண்ட பிரிஸ்கா உடனே தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து கண்ணனும், பிரிஸ்காவை கன்னங்குளத்தில் இருந்து பால்குளம் பை-பாஸ் சாலை வழியாக அழைத்து சென்றார்.
அப்போது 2 பேரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை தொடர்ந்து, 2 பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பிரிஸ்கா கொண்டு வந்திருந்த விஷ மாத்திரையை பழத்தில் கலந்து, 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் 2 பேரும் மீண்டும் காதல் கதைகளை பேசி கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, வாந்தி எடுத்தனர். கண்ணனுக்கு லேசான தெளிவு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வேனில் மயங்கி கிடந்த 2 பேரையும், நாகர்கோவில் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரிஸ்கா இறந்தார். கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி உள்ள போது, கல்லூரி மனைவி ஒருவரை காதலித்து வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications