புதிய பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை உயர்நீதிமன்றம்- மக்கள் வரவேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இனி எவருமே உரிய அடையாள அட்டை இல்லாமல் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாது. 3 ஷிப்ட்டுகளாக போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புதிய பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு மக்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சில மாத இடைவெளியில் நடந்த 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களால் நாடே அதிர்ந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய பாதுகாப்பு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. நேற்று முதல் இந்த பாதுகாப்பு நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தப் பாதுகாப்பில் மொத்தம் 430 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு ஷிப்ட்டாகவும், 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட்டாகவும், இரவு ஒரு ஷிப்ட்டாகவும் மூன்று ஷிப்ட்களில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து கேட்களும் இரவு 8 மணிககு முடப்பட்டு விடும். ஒவ்வொரு கேட்டிலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் அனைத்து கேட்களிலும் நிறுவப்பட்டுள்ளன.
அடையாள அட்டைகளைக் காட்டித்தான் யாராக இருந்தாலும் உள்ளே நுழைய வேண்டும். வழக்கு விசாரணைக்காக வருவோர் தங்களது வக்கீல்களிடமிருந்து அடையாளச்சீட்டு வாங்கி வந்து காட்டினால்தான் உள்ளே அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள், வழக்கு விசாரணைக்காக வருவோர் உரிய சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
விரைவில் கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் பொருத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications