ஓட்டு கேட்டு நீலகிரி எஸ்டேட்டுக்குச் சென்ற காங். வேட்பாளரை கரடி விரட்டியது
நீலகிரி: நீலகிரியில் ஓட்டு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளை கரடி ஒன்று துரத்தியதால் வேட்பாளர் உள்ளிட்டோர் வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு பதறியடித்து ஓடினர்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட தலைவராக உள்ளவர் சுப்பிரமணி. இவர் உள்ளாட்சி தேர்தலில் பாலகொலா ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் 8ம் நம்பர் என்ற இடத்தில், தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் இலை பறித்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம், ஓட்டு சேகரிக்க காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுப்பிரமணி தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்து இருந்த கரடி, திடீரென பாய்ந்து வந்து வேட்பாளர் சுப்பிரமணி மற்றும் ஆதரவாளர்களை துரத்தியது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் வேட்பாளரும், நிர்வாகிகளும் அலறி அடித்து ஓடினர். அலறல் சத்தம் கேட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கம்பு மற்றும் கத்திகளோடு வந்து கரடியை விரட்டி வேட்பாளரை காப்பாறினர்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications