அன்றும், இன்றும், என்றும் எனது கனவில் கூட மாற்று சிந்தனை வராது- பரிதி இளம்வழுதி

சமீபத்தில் எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி திமுக வட்டாரத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்தார் பரிதி.
இதையடுத்து அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவார் என்று செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கமளிக்காமல் இருந்தார் பரிதி. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
எனது நேர்மைக்கும், விசுவாசத்துக்கும் களங்கம் உண்டாக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்து, போற்றி அகவல் பாடி ஆங்கிலத்தில் புத்தகம் தயாரித்து, அந்தப் புத்தகக் கட்டுகள் என்றைக்காவது பயன்படும் என்ற எண்ணத்தில் இன்றைக்கும் பத்திரமாகப் பாதுகாத்து வருபவர்தான் என் மீது தவறான தகவல்களை திமுக தலைமைக்குத் தெரிவித்து வருகிறார்.
அண்ணா கூறியதைப்போல, இதையெல்லாம் தாங்கும் வல்லமையையும், நியாயத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் எனது தந்தை இளம்பரிதியிடம் இருந்து பெற்றிருக்கிறேன்.
எனவே, திமுகவிலிருந்தபடியே நியாயத்துக்காகப் போராடுவேனே தவிர, அன்றும், இன்றும், என்றும் என் கனவில்கூட மாற்று சிந்தனை வராது என்று பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பரிதியை சமாதானப்படுத்த திமுக தலைமை முயற்சி செய்ததாகவும், ஆனால் அது பலன் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், பரிதி மீது மு.க.ஸ்டாலின் கடும் கோபத்துடன் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்தப் பின்னணியில் இன்று பெரியமேடு பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரிதி பிரசாரம் செய்வார் என்று எழும்பூர் திமுக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications