இளவரசரான அக்காள் மகனைக் கொன்ற குவைத் இளவரசருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான இளவரசரின் பெயர் ஷேக் பைசல் அல் அப்துல்லா அல் சபா. இவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுபவரின் பெயர் ஷேக் பசில் சலேம் சபா அல் சலேம் அல் சபா. ஷேக் பசிலின் தாயார், ஷேக் பைசலுக்கு அக்காள் முறை வருமாம்.
குவைத் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி வருகிறார் ஷேக் பைசல். இவர் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் மசீலா என்ற அரண்மனையில் தங்கியுள்ள ஷேக் பசிலை பார்க்கச் சென்றார். இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்களும் அருகில் இருந்துள்ளனர். பின்னர் தனியாக பேச வேண்டும் என்று கூறி பசிலை அழைத்துச் சென்றுள்ளார் பைசல். சிறிது நேரம் கழித்து டுமீல் என சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். அப்போது பசில் குண்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதையடுத்து அவரை முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
மிக நெருக்கத்தில் வைத்து பசில் பலமுறை சுடப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஷேக் பைசலை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் தற்போது பைசலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதாகும் பைசல், குவைத்தின் 12வது மன்னரான ஷேக் சபா அல் சலேம் அல் சபாவின் பேரன் ஆவார். இவரது பெற்றோர் ஷேக் சலேம் சபா அல் சலேம் அல் சபா மற்றும் ஷைக்கா பத்ரியா அப்துல்லா அல் ஜபேர் அல் சபா தம்பதிகள் ஆவர்.
இவரது தந்தை அமெரிக்காவுக்கான குவைத் தூதராக பணியாற்றியவர். அதேபோல கனடா, வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். உடல் நலம் காரணமாக கடந்த 2001ம் ஆண்டு அவர் அரசியல் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications