திமுக ஆட்சியில் கவுன்சிலர்கள் என்றாலே மக்களிடம் அச்ச உணர்வு தான் இருந்தது- ஜெ
சேலம் & ஈரோடு: ஆட்சிக்கு வந்தவுடன் மின் தட்டுப்பாட்டை நீக்குவதாக கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதிமொழி அளித்து வந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போது அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை தனி விமானம் மூலம் சேலம் வந்த அவர் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், அடுத்த ஆண்டு (அதாவது 2012ம் ஆண்டு இறுதிக்குள்) தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றார்.
பின்னர் ஈரோட்டில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில், சட்டம்- ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, அமளிக் காடாக விளங்கிய தமிழகத்தை நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக, மாற்றிக் காட்டி உள்ளேன்.
உங்களின் சொத்துக்கள் எல்லாம், எப்போது திமுகவினரால் பறிக்கப்படுமோ என்று இருந்த நிலை மாறி நீங்கள் எல்லாம் தற்போது, நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள், உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக தங்களை முன்னேற்றிக் கொண்டனர்.
கவுன்சிலர்கள் என்றாலே, உங்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தான் இருந்தது. அந்த அளவிற்கு திமுகவினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
முன்னாள் திமுக. அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவால், நீங்கள் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. உங்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தான சூழ்நிலை நிலவியது. உங்கள் நலன்களின் மீது அக்கறை காட்டமால் உங்கள் நிலங்களின் மீது கவனம் செலுத்தினார் ராஜா. இப்படிப்பட்ட ராஜாவை தட்டிக் கேட்காமல் அவருக்கு வழக்கிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. இப்படிப்பட்டவர் தான் தற்போது திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பை வகிக்கிறார். இவருக்கு, இந்த உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை அளித்ததைப் போல், நல்ல திட்டங்கள் தொடர உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்றார்.
மன்மோகனின் லெட்டர் கிடைக்கலை..
முன்னதாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதியதாகத் கூறப்படும் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை.
பிரதமர் ஏற்கனவே கடந்த 4ம் தேதி தேதியிட்டு எழுதிய கடிதம் பற்றி டிவி'மற்றும் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால், அந்தக் கடிதம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது. அடுத்ததாக, பிரதமர் எனக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
சங்கர்ராமன் கொலை வழக்கு...
ஆட்சி மாற்றத்துக்குப் பின் சங்கரராமன் கொலை வழக்கில் நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறதே? என்று கேட்டதற்கு, இந்த வழக்கு கோர்ட்டில் தற்போது உள்ளது. அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
2 ஜி ஊழலில், பிரதமரின் கடிதத்தை மத்திய அரசு பரிசீலித்திருக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மத்திய அரசு ஏன் மவுனமாக உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதே?
இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டே கையில் எடுத்துள்ளது. எனவே, இவ்விஷயத்தில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.