ஆக்கிரமிப்பு பிரச்னையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்டிடம்
மதுரை: தி.மு.க. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான 'மதுரை தயா சைபர் பார்க்' கட்டுமானத்தில் விதிமீறல் நடந்ததுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே தி.மு.க. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான மதுரை தயா சைபர் பார்க் உள்ளது. இந்த கட்டடம் அமைந்துள்ள 1.20 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு, மு.க.அழகிரி பெயரில் பட்டா உள்ளது. மேற்கில் உள்ள சில சென்ட் நிலத்தையும் சேர்த்து சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோல, வடகிழக்கில் வண்டிப்பாதை புறம்போக்கில் சுற்றுசுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வண்டிப்பாதை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் மாநகராட்சியால் குத்தகை ஏதும் விடப்பட்டு இருப்பின், அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில், அதை ஆக்கிரமிப்பாகக் கருதி அகற்ற நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு, மாவட்ட கலெக்டர் சகாயம் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கடித உத்தரவு குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தயா சைபர் பார்க் கட்டுமானத்திலும் விதிமீறல் இருப்பது தெரிந்துள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு தயா சைபர் பார்க் பெயரில், மாநகராட்சிக்கு தபால் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கு செக் வந்துள்ளது. அதில் கட்டட உரிமம் பெறுவதற்கான கட்டணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் உஷாரான அதிகாரிகள், இந்த இடம் குறித்த வரைபடத்தை ஆய்வு செய்த போது, கட்டடத்திற்கான உரிமம் கட்டணம் 5,080 ரூபாய் என்பதும், கட்டுமானத்தில் விதிமுறை மீறல் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அந்த செக்கை தபால் மூலமே அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து கட்டிட விதிமீறல் குறித்த விசாரணை ரகசியமாக துவங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிந்து மதுரை மாநாகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி, அதிகாரிகள் புடைசூழ மேயராக வருபவர் அந்த கட்டிடத்தில் அதிரடியாக நுழைந்து புயல் கிளப்பப் போவதாக அ.தி.மு.க. தரப்பில் தகவலை கசியவிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications