வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம்- ரூ. 3.8 லட்சம் பறிமுதல்- 6 பேர் கைது
நெல்லை: வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணத்துடன் சென்ற தொழிலதிபர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணம் பகுதியில் சிலர் காரில் பணம் கொண்டு செல்வதாகவும், அதை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். காரில் 8 பேர் இருந்தனர். அவர்களில் 2 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓடினர். மற்ற 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திசையன்விளை நாலாந்துரையை சேர்ந்த துரைப்பாண்டி, தோட்டிக்காரன் விளை மாடசாமி, வாழைத்தோட்டம் ராஜன், நெல்லை சந்திப்பு சிஎன் கிராமம் கணேஷ், அருணாசலம், மகாராஜா நகர் 4வது குறுக்குதெரு பெருமாள் என்பது தெரிய வந்தது.
இவர்களின் உறவினர் லட்சுமணன் என்பவர் நாங்குநேரி ஓன்றியம் 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக தேர்தல் செலவுக்கு பணம் கொண்டு சென்றதும், விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 8 ஆயி்ரத்து 405ம், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications