வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றி விட்டது தேர்தல் ஆணையம் - ஏ.கே.மூர்த்தி
சென்னை: அதிமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போடுகின்றனர் என்று சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில தேர்தல் ஆணையம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி கண்ணம்மாபேட்டை மாநகராட்சி பள்ளியில் இன்று காலை 9.15 மணியளவில் வாக்களித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 4,876க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. ஆனால் 80 சதவீத இடங்களில் வெப் கேமிரா பொருத்தாமல் தேர்தல் ஆணையம் ஏமாற்றிவிட்டது.
இதேபோன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் உறுதியளித்தார். அதுவும் பொய்யாகிவிட்டது.
கடந்த 2 உள்ளாட்சித் தேர்தல்களிலும் திராவிடக் கட்சிகள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி தங்கள் இஷ்டத்திற்கு கள்ள ஓட்டுகள் போட்டன. தற்போதும் அதே போன்று தான் அதிமுக செய்கிறது. எழும்பூர், பெருங்குடியில் உள்ள வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டசபை தேர்தல் போன்று இந்த தேர்தலும் அமைதியாக நடந்தால் மக்கள் எந்தவித பயமும் இன்றி வாக்களிப்பார்கள். மக்கள் பயமின்றி வாக்களித்தால் நான் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.












Click it and Unblock the Notifications