திருவண்ணாமலையில் ஓட்டு போட்டால் பிரியாணி பொட்டலம் வழங்கும் வேட்பாளர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர்களுக்கு சாப்பாட்டு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பணம், இலவசங்கள் உள்ளிட்டவைகள் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர் பகுதி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், துறிஞ்சாபுரம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு காலை முதல் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களுக்கு சாப்பாட்டு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் காலை நேரத்தில் இட்லி, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. 11 மணிக்கு மேல் வாக்களித்துவிட்டு வந்தவர்களுக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது.
வெளியே வரும் வாக்காளர்களிடம் சைவமா, அசைவமா என கேட்டபின் அதற்கேற்ப பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தபால் ஓட்டுக்களில் முறைகேடு - வேட்பாளர்கள் குமுறல்
திருவண்ணாமலையில் விநியோகம் செய்யப்பட்ட 104 தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்கக் கோரி நகராட்சி ஆணையாளர் மனோகரிடம் சர்வ கட்சி வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தபால் ஓட்டில் முறைகேடு செய்யப்பட்டதாக வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை அனைத்து கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள்(19ம் தேதி) நடைபெற உள்ளது.
தேர்தலில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கூறியுள்ளனர். பின்பு அந்த தபால் ஓட்டுக்களை வாங்கி அவர்களே பெட்டியில் போட்டதாக கூறப்படுகின்றது.
இதையறிந்த அதிமுக, திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக மெயின் கேட்டை பூட்ட முயன்றனர்.
இதனால் விநியோகம் செய்யப்பட்ட 104 தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்கவேண்டும் என நகராட்சி ஆணையாளர் மனோகரிடம் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications