சென்னையில் வெளுத்து வாங்கிய மழை- வாக்காளர்கள் திணறல்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று காலை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வட சென்னைப் பகுதியில் மாநகராட்சித் தேர்தல் நடந்த பகுதிகளில் வாக்காளர்கள் லேசான பாதிப்பை சந்தித்தனர்.
சென்னை நகரில் இன்று காலை திடீரென பலத்த மழை பெய்தது. முதலில் வட சென்னைப் பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. மகாகவி பாரதி நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகராட்சித் தேர்தலி்ல வாக்களிக்கச் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.
கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்தனர்.
பின்னர் தென் சென்னைப் பகுதிகளில் மழை கொட்டத் தொடங்கியது. குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. இருப்பினும் இப்பகுதிகளில் இன்று தேர்தல் இல்லை என்பதால் வாக்களிக்கும் பிரச்சினை வரவில்லை.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சியே இந்த மழைக்குக் காரணம். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது மழை பெய்யும்.
அக்டோபர் 20ம் தேதிக்குப் பின்னர் வட கிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications