2006ல் நடந்ததை விட அமைதியான முறையில் தேர்தல் நடந்தது- சோ. அய்யர்
சென்னை: 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போதைய உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. யாருக்கேனும் இதில் சந்தேகம் இருந்தால், 2006ல் நடந்த தேர்தல் வாக்குப் பதிவு சிடியைப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர்.
முதல் கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் சோ. அய்யர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மிக அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் எனது நன்றி. ஓரிரு இடங்களில் சிறுசிறு சம்பவங்கள் நடைபெற்றதே தவிர, பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தல்களைக் காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் குறைவாகத்தான் வாக்குப்பதிவு இருக்கும். வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகள் போட்டதாக திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் புகார் கூறவில்லை. எனினும் சாதாரணமானவர்கள் அளித்த புகார்கள்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், தேர்தல் பார்வையாளர்கள், தொடர்புடைய அதிகாரிகள், வாக்குச்சாவடிகளில் பணியாற்றிவர்களின் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த முதல் கட்டத் தேர்தலில் பெரியளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சந்தேகம் இருந்தால் 2006-ம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சிடியைப் போட்டுப் பாருங்கள் என்றார் அவர்.
வாக்காளர்கள் பெயர்கள் பெருமளவில் விடுபட்டது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications