போடி என்று திட்டிய அமைச்சருக்கு 'நாசமாப் போவீங்க' என்று பெண் சாபம்!
வேலூர்: தான் கொடுத்த மனுவைப் படிக்காமலேயே தூக்கிப் போட்டதோடு மட்டுமல்லாமல், தூரப் போடி என்றும் திட்டிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய்யின் செயலால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பெண் பிரமுகர், அமைச்சரைப் பார்த்து நாசமாப் போவீங்க என்று சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் 40வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது மகளிர் அணியைச் சேர்ந்த சாரதா என்பவர் அமைச்சரை அணுகி ஒரு மனுவைக் கொடுத்தார். அதை வாங்கிய அமைச்சர் விஜய், படிக்கக் கூட செய்யாமல் அப்பெண்ணின் முகத்தி்ல வீசியதாக தெரிகிறது. மேலும் தூரப் போடி என்றும் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ரோட்டில் நின்றபடி, கட்சிக்காரியையேய மோசமாக திட்டுகிறார்கள். என்னை ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் நாசமாகப் போவார்கள் என்று சாபமிட்டு சத்தமாக பேசினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் என்ன விவகாரம் என்று விசாரித்தபோது, டாஸ்மாக் பார்களை 2 மாதத்திற்கு முன்பு ஏலம் விட்டனர். அதில் ஒரு பாரை இந்தப் பெண் ஏலத்தில் எடுத்துள்ளார். ஆனால் அவரை அணுகிய அமைச்சரின் அடிப்பொடிகளான கலையரசன் மற்றும் வேதகிரி ஆகியோர் பாரைக் கொடுத்து விடு, பதிலுக்கு கவுன்சிலர் பதவி தருகிறோம் என்று ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி இவரும் பாரைக் கொடுத்துள்ளார். ஆனால் சொல்லியபடி கவுன்சிலர் சீட் தரவில்லை. இதனால்தான் மனு கொடுக்க வந்து அமைச்சரிடம் திட்டு வாங்கியுள்ளார்.
அமைச்சர் திட்டியதும், பதிலுக்கு மகளிர் அணிப் பிரமுகர் சாபமிட்டதையும் பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications