இது நல்லதல்ல ஜெயலலிதா அவர்களே: வைகோ
கோவில்பட்டி & மதுரை: சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக மாணவர்களின் படிப்போடு விளையாடியது அதிமுக அரசு என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நாளை உள்ளாட்சிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந் நிலையில் கோவில்பட்டியில் அவர் பேசுகையில்,
சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக மாணவர்களின் படிப்போடு விளையாடியது அதிமுக அரசு என்பதை மக்ககள் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். லட்சக்கணக்கான குடும்பங்களில் குழந்தைகளின் படிப்பு பாழாகிவிட்டதே என்று நாம் பரிதவிக்கவில்லையா.
சென்னை உயர்நீதிமன்றம், உடனடியாக பள்ளியை திறந்து புத்தங்களை கொடுங்கள் என்று தீர்ப்பு சொல்லவில்லையா?. ஏன் நீங்கள் (ஜெயலலிதா) ஏற்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவை யார் மாற்றுவது? என்பது நல்ல அணுகுமுறை இல்லை முதல்வர் அவர்களே என்றார்.
பிரசாரத்தின்போது மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு வைகோ உதவி:
இந் நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு மதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதுகுறித்து மதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(35). இவர் கடந்த மாதம் 14ம் தேதி மதிமுக கூட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி இறந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நாகராஜ் மனைவி சங்கரேஸ்வரியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அவரது குழந்தைகள் கனகராஜ், கவுசல்யா 2 பேரையும் தனது சொந்த செலவில் படிக்க வைப்பதாகவும் உறுதி அளித்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications