சேலத்தில் சுயேச்சை வேட்பாளர் நண்பருடன் வெட்டி கொலை
சேலம்: சேலத்தில் சுயேச்சை வேட்பாளர் நண்பருடன் சென்றபோது, வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டிதாதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு(26). திமுக-வை சேர்ந்த அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மணிகண்டன என்பவருடன் பிரபு நேற்றிரவு மேட்டுப்பட்டியில் இருந்து அயோத்திப் பட்டணத்தை நோக்கி பைக்கில் சென்றார். அயோத்திப் பட்டணம் கோமு நகர் முனியப்பன் கோவில் அருகே வந்த போது, இருட்டில் மறைந்திருந்த கும்பல் ஒன்று, பைக்கை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் 2 பேரையும் மிரட்டிய கும்பல், தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த பிரபு மற்றும் மணிகண்டன் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தனர். இதில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவ்வழியாக வந்த சிலர் மணிகண்டனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார். தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையி்ல ஏற்கனவே பிரபு, ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications