மதுரையில் தீபாவளி டிரெஸ் பிடிக்காததால் தூக்கில் தொங்கிய 2 சகோதரிகள்
மதுரை: தீபாவளி பண்டிகைக்கு குறைந்த விலையில் புத்தாடை எடுத்துக் கொடுத்ததால் அதிருப்தியடைந்த சகோதரிகள் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், செல்லூர், கட்டபொம்மன் நகரில் உள்ள பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். வடை வியாபாரி. அவரது மனைவி செண்பகம். அவர்களுக்கு பாரதிராஜ் என்ற மகனும், சந்திரா(17), தமிழ்ச்செல்வி(15) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சந்திரா அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தமிழ்செல்வி 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கினர். சாமிநாதன் தன் சக்திக்கு ஏற்ப குறைந்த விலையில் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்.
பண்டிகை நாளன்று விலை குறைந்த ஆடையையா அணிவது என்று சந்திரா, தமிழ்செல்வி மனமுடைந்தனர். நேற்று முன்தினம் காலை அவர்கள் இருவரும் தந்தை சாமிநாதனிடம் பணம் வாங்கி கடைக்கு சென்றுவிட்டு வந்தனர். வீடு திரும்பியதில் இருந்தே அவர்கள் யாரிடமும் பேசவில்லை.
இந்நிலையில் மதியம் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற 2 பேரும் வெளியே வரவே இல்லை. நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் செண்பகம் தனது மகள்களை வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த செண்பகம் அந்த அறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது சகோதரிகள் இருவரும் துப்பாட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறினார்.
செண்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications