திருவண்ணாமலையில் நடுரோட்டில் எஸ்.ஐ.யுடன் தகராறு செய்த தேமுதிக எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை: ஆரணியில் தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேலுக்கும், எஸ்.ஐ.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் உள்ள 5வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக சார்ப்பனார்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வாக்காளர்களிடம் சில கட்சி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக தெரிகிறது.
இதை அறிந்த எஸ்.ஐ. ஆனந்தன் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த கட்சிக்காரர்களையும், வேட்பாளர்களையும் கலைந்து செல்லும்படி கூறினார். இதனையடுத்து சிலர் மட்டும் கலைந்து சென்றனர். அதை கண்டு கொள்ளாத தேமுதிக வேட்பாளர் சத்தியராஜ் தொடர்ந்து வாக்கு சேகரித்து கொண்டே இருந்தார். இதனால் ஆனந்தன் சத்தியராஜை திட்டியுள்ளார். மேலும் அங்கு நின்ற கட்சியினரையும், வேட்பாளர்களையும் அதிரடிப்படையினர் லேசான தடியடி நடத்தி துரத்தினர்.
இதில் கோபமடைந்த சத்தியராஜ் அப்பகுதி எம்.எல்.ஏ. பாபு முருகவேலை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தார். பாபு முருகவேல் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.ஐ. ஆனந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முருகவேல், ஆட்சி மாறிவிட்டது. அதேபோல காட்சியும் மாற வேண்டும். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் நான்கரை ஆண்டுகள் நான் தான் இந்த பகுதியில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட எஸ்.பி.ஆனந்தன், எனக்கு இங்கேயே பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எங்கு பணிமாற்றம் செய்தாலும் எனக்கு கவலை இல்லை, என பதிலளித்தார்.
நடுத்தெருவில் நின்று கொண்டு எம்.எல்.ஏ.வும், எஸ்.ஐ.யும் வாக்குவாதம் செய்ததை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின் பாபு முருகவேல் தனது காரில் ஏறி சென்றுவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications