சபரிமலை: பூஜை கட்டணங்களை உயர்த்த தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு
கொல்லம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை கட்டணங்களை உயர்த்த அனுமதி கோரி தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. கோவில் பூஜை கட்டணங்களை தேவசம் போர்டு 2 மாதங்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு உயர்த்தியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து அப்போதைய சபரி்மலை சிறப்பு ஆணையர் பஞ்சாபிகேசன் கேரள உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பக்தர்களுக்கு முறையாக அறிவித்து அவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கட்டண உயர்வை தேவசம்போர்டு வாபஸ் பெற்றது. இந்த நிலையில் பூஜை கட்டணத்தை மீண்டும் உயர்த்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி தேவசம்போர்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தவிர ஐயப்பனை மிக அருகே நின்று தரிசிக்க புதிதாக டிக்கெட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தரிசனத்திற்கு ரூ. 2,500 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதிகாலையில் நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் நடைபெறும். இந்த தரிசனத்தின் போதும், உஷபூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை, இரவு பூஜை ஆகிய பூஜைகளின் போதும் ரூ.2,500 கட்டினால் மட்டுமே கோவில் அருகே நின்று ஐயப்பனை தரிசிக்க முடியும்.
வரும் 25ம் தேதி சித்திரை ஆட்ட திருநாளை முன்னி்ட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் கட்டண உயர்வை அமுல்படுத்த கேரள உயர் நீதிமன்றத்திடம் தேவசம்போர்டு அனுமதி கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications