அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சி 96 இடங்களில் வெற்றி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி 600 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகளைக் கேட்காமலேயே வேட்பாளர்களை அறிவித்தது. இதையடுத்து சில கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிட்டன. அவ்வாறு தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சியும் ஒன்று.
மனிதநேய மக்கள் கட்சி மொத்தம் 600 இடங்களில் தனித்து களமிறங்கியது. அதில் 16 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகாரட்சியின் 86வது வார்டு, 14 நகராட்சி வார்டுகள், 37 பேரூராட்சி வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை, நெல்லிக்குப்பம், கடையநல்லூர், தென்காசி, வாணியம்பாடி, திருவாரூர், கூத்தாநல்லூர், வந்தவாசி ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும், உடன்குடி, சோழபுரம், அபிராமம், இளையான்குடி, முதுகுளத்தூர், பெருந்துறை, கயத்தாறு, தக்கலை, லால்பேட்டை, நெல்லை ஏர்வாடி, நெல்லிக்குப்பம், திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பஞ்சாயத்து தலைவராகவும், வெங்கடேசன் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications