ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை துவங்கும்: வானிலை மையம் தகவல்

வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அந்த சீசன் முடிந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருவேளை வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிட்டதால் தான் மழை பெய்கிறதோ என்று மக்கள் நினைத்தனர். ஆனால் தற்போது பெய்து வரும் மழைக்கு காற்றின் சுழற்சி தான் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறுகையில்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலக்கப்பட்டுவிட்டது. தற்போது கீழைக்காற்று வீசத் துவங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும். அதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்றார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தான் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications