துருக்கி நிலநடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிரோடு மீட்பு
அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 நாட்களுக்கு முன் தரைமட்டமான கட்ட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவி்த்த குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வேன் நகரில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த இடிப்பாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்ககானோர் பலியாகி இருக்கலாம் என அச்சப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 459 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் 1,350 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எர்சிஸ் பகுதியில் பிறந்து 2 வாரம் மட்டுமே ஆன அஸ்ரா குராடூமன் என்ற குழந்தை மீட்பு குழுவினரால் உயிரோடு மீட்கப்பட்டது. 2 நாட்களாக இடிபாடுகளில் சிக்கி தவித்த இந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையி்ல சேர்க்கப்பட்டுள்ளது. அதேபகுதியில் சிறிது நேர தேடலுக்கு பின் குழந்தையின் தாய் சமீஹா மற்றும் பாட்டி குல்ஷாடி(73) ஆகியோர் மீட்கப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த இந்த குடும்பத்தை சேர்ந்த அஸ்ராவின் தந்தையை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
மீட்பு பணியில் ஏராளமான வாகனங்களுடன் 3,000 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 26 விமானங்கள் நிவாரணப் பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. காயமடைந்து மீட்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் 2,256 கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கலாம் என செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.