தேர்தல் வெற்றி- தோல்வி தகராறில் தேமுதிக நிர்வாகியின் தந்தை பலி
ஸ்ரீபெரும்புதூர் : உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி- தோல்வி குறித்து எழுந்த தகராறில், 2 கட்சி ஆதரவாளர்கள் மோதி கொண்டனர். இதில் தேமுதிக நிர்வாகியின் தந்தை தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து பலியானார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 8வது வார்டில் தேமுதிக வேட்பாளர் சத்தியா, புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் மதன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மதன்ராஜ் வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மதன்ராஜின் ஆதரவாளர் சத்தீஷ்குமார், மிதுன்சக்கரவர்த்தி ஆகியோர், தோல்வியடைந்த வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் இடையே தேர்தல் பெற்ற வெற்றி-தோல்வி குறித்து தகராறு ஏற்பட்டது. பின்னர் கைக்கலப்பாக மாறியது.
இதில் காயமடைந்த மிதுன்சக்கரவர்த்தி தனியார் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்த மதன்ராஜ் ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வி.ஆர்.பி.சத்திரம் பகுதியில் உள்ள சத்தியாவின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைந்தனர். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சத்தியாவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதை தடுக்க வந்த சத்தியாவின் தந்தை கணேசனையும் (62) அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர் அப்பகுதியில் உள்ள மற்ற 7 வீடுகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த கணேசன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திர குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
இரு தரப்பிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் பேரில் மதன்ராஜ் ஆதரவாளர்களான சத்தீஷ்குமார், வீரபத்திரன், பாலு, குமரேசன், சட்டநாதன், தயாளன் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications