வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி - சென்னை நர்ஸ் மீது புகார்
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கேரளாவை சேர்ந்த 9 வாலிபர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியதாக சென்னையை சேர்ந்த நர்சு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், முலாயம்அய்யப்பன்காவு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவர் நேற்று காலையில் தனது நண்பர்கள் ரின்டோ ராஜூ, சஜாய் ஜாய், மெபின், அனுப், அனுப்கோபால், பிஜோஜான், கிளாட்சன் ஜார்ஜ், ஆசாபாஜூ ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு வந்திருந்தார்.
கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, கேரளாவை சேர்ந்த நாங்கள் அனைவரும் டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்துள்ளோம். நான் திருச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறேன்.
சென்னை சிட்லபாக்கத்தில் எனது சகோதரியின் வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னையி்ல் நர்சாக பணியாற்றி வந்த ரங்கநாயகியும், அவரது சகோதரர் கண்ணனும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நர்சிங் படிப்பு முடித்தவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கிறது.
அங்கு செல்ல விசா மற்றும் பயண செலவுகளுக்காக 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கு முன்பணம் தேவை என கேட்டனர். இதை நம்பிய நான் எனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து ரங்கநாயகியிடம் 24,90,000 ரூபாய் பணத்தை கொடுத்தேன்.
ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாரிடம் முதலில் புகார் அளித்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை பெற்று கொண்ட கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் வழக்கு பதிந்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications