ஓ.பியுடன் மோதல்: தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பதவி பறிப்பு- ஜெ அதிரடி
தேனி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு சூறையாடப்பட்ட நிலையில், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட அதிமுகவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு கோஷ்டியும், மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு முதலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பழனிராஜ். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். பின்னர் அவரை மாற்றிய கட்சித் தலைமை பாலமுருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இவர் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் ஆவார்.
இதையடுத்து பழனிராஜ் போட்டி வேட்பாளராக களம் குதித்தார். இந்த நிலையில், தலைவர் தேர்தலில் பாலமுருகன் 9714 வாக்குகளைப் பெற்று தோற்றார். வெறும் 11 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடினர்.
இந் நிலையில் தேனி மாவட்டச் செயலாளர் பதவிலியிருந்து தங்க தமிழ்ச்செல்வனை முதல்வர் ஜெயலிலதா நீக்கியுள்ளார்.
தேனி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் டி.சிவக்குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் கம்பம் நகர மன்றத் தலைவர் டி.சிவக்குமார் நியமிக்கப்படுகிறார்.
அதே போல திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.ஆர்.சிவபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் மு.பரஞ்சோதி எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந் நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.சிவக்குமார் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.












Click it and Unblock the Notifications