மனைவி கண் முன் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்மகும்பல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரவுடி ஒருவரை அதிகாலை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாலாவதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி பானுரேகா. இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள கீழ்அணைக்கரை பகுதியில் வாடகை வீடு எடுத்து குடியேறினர்.
விழுப்புரத்தில் ரவுடியாக சுற்றித் திரிந்த கார்த்தி, கீழ்அணைக்கரையில் குடியேறிய பின் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கார்த்தி வீட்டு கதவை மர்மநபர்கள் சிலர் தட்டினர். ஆனால் கார்த்தி கதவை திறக்கவில்லை. இதையடுத்து 3 பேர் கொண்டு மர்மகும்பல் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
வீட்டிற்குள் இருந்த கார்த்தியை, 3 பேர் கொண்ட மர்மகும்பல் பயங்கர ஆயுதங்களால் சராமரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பானுரேகாவின் அலறினார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தனர்.
அதனை கண்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். கார்த்தி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலை செய்யப்பட்ட கார்த்தியின் அண்ணன் ரமேஷ் மீது பல கொலை வழக்குகள் உள்ளது. இதனால் கார்த்தியும் விழுப்புரம் பகுதியில் ரவுடி சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில் ரமேஷின் எதிர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், எதிர் தரப்பை சேர்ந்த ஒருவரை ரமேஷ் கொலை செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் ரமேஷை பழிவாங்க, அவரது தம்பி கார்த்தியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்ய கூடும் என பயந்து, கார்த்தி குடும்பத்துடன் கீழ்அணைக்கரையில் வாடகை வீட்டில் குடியேறினார். இருப்பினும் நேற்று மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications