கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- மீனவர்கள் மீது கல்வீச்சு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை அன்று 583 படகுகளில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு பத்து படகுகளில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி விரட்டினர்.
பின்னர் சேவியர், அந்தோணி ஆகிய இருவரின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் கருங்கற்களை வீசி எறிந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் படகுகளில் இருந்த இறால், மீன்களையும் கடற்படையினர் பறித்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து கரை திரும்பினர்.
தினந்தோறும் இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தங்களை தாக்கி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications