ஜெ. தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்தி, அச்சம் ஏதும் இன்றி பெருவாரியான மக்கள் வாக்களிக்க வகை செய்த மாநில தேர்தல் ஆணையத்திற்கும், அதன் கீழ் பணியாற்றிவர்களுக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நேற்று பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 11-வது அமைச்சரவை கூட்டம் 1.11.2011 அன்று புனித ஜார்ஜ் கோட்டை, தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டத்திற்கான பொருள்கள் குறித்து விவாதிப்பதற்கு முன்பு, முதலில் அமைச்சராக பதவி வகித்த சொ.கருப்பசாமியின் மறைவிற்கு பின்வருமாறு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"அ.தி.மு.க. தலைமையிலான இந்த அமைச்சரவையில், அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சொ.கருப்பசாமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 22.10.2011 அன்று மறைவுற்றது குறித்து இந்த அமைச்சரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத்துயரமும் கொள்கிறது.
1996 முதல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக செவ்வனே பணியாற்றியவர் கருப்பசாமி. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர் கருப்பசாமி.
கருப்பசாமியை இழந்து வாடும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இந்த அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறது.''
மறைந்த கருப்பசாமிக்கு மரியாதை செலுத்தும் வகையில், முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்தி, அச்சம் ஏதும் இன்றி பெருவாரியான மக்கள் வாக்களிக்க வகை செய்த மாநில தேர்தல் ஆணையத்திற்கும், அதன் கீழ் பணியாற்றிவர்களுக்கும் அமைச்சரவை தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தது. இதனையடுத்து அமைச்சரவை கூட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications