ஜெ. தலைமையில் 2 நாள் கலெக்டர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு-முதல்வரான பின்னர் முதல் மாநாடு
சென்னை: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, நாள்தோறும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர் வருமானத்தினை பெருக்குவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட முடிவு
மக்கள் நலனுக்கான அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள் மாவட்ட ஆட்சியர்கள். அதே போன்று, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத் தருவதிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும், மாநகரக் காவல் ஆணையர்களும், உயர் காவல் துறை அதிகாரிகளும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
திட்டங்கள் திறனாய்வு
அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை திறனாய்வு செய்யும் வகையிலும், உள்ளூர் மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கவும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டினை வரும் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் எனது தலைமையில் நடத்த முடிவு செய்துள்ளேன்.
முதல் மாநாடு
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், அரசுச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
இதன்படி, வரும் 13-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடும், வரும் 14-ம் தேதியன்று முற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடும், அன்று பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடும் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications