கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெடிகுண்டு வழக்கில் சிக்க வைத்த ஆசிரியை கைது
நாகர்கோவில்: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன் இருந்ததால் அவரை திட்டமிட்டு வெடிகுண்டு வழக்கில் சிக்க வைத்த ஆசிரியை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பாலவிளையைச் சேர்ந்தவர் ஜெயக்கென்னடி. அவரது மனைவி விஜி. ஆசிரியை. வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஜெயக்கென்னடி அண்மையில் தான் ஊருக்கு வந்தார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் திருவனந்தபுரத்தில் சிகிச்சை எடுப்பதற்காக வெளிநாடு திரும்பும் தேதியை தள்ளிப்போட்டார்.
இந்நிலையில் அவரது வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெயக்கென்னடி போலீசார் கைது செய்து விசாரித்தனர். அத்வானி வந்த பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்றும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நிரபராதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகப் பார்வை விஜி மீது விழுந்தது. அவரது செல்போனைப் பார்த்ததில் அவர் சாமியார்மடத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஜெயராஜைப் பிடித்து விசாரித்தனர். அப்போது விஜிக்கும், ஜெயராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. வெளிநாட்டில் இருந்து ஜெயக்கென்னடி வந்துவி்ட்டதால் அவர்களால் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் ஜெயராஜ் வெடிபொருட்கள் வாங்கி அதை ஜெயக்கென்னடி வீட்டு பின்புறத்தில் வைத்துள்ளார். இது விஜிக்கும் தெரியும்.
இதைத் தொடர்ந்து போலீசார் ஆஸ்டின் ஜெயராஜ், விஜி, அவரது தாயார், வெடிபொருட்கள் வாங்கிக் கொடுத்த ஜெயச்சந்திர பூபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விஜி கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ஆஸ்டின் ஜெயராஜ் என் குடும்பத்துக்கு பல வகைகளில் உதவியுள்ளார். ஆனால் அவருடன் பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த பின், என்னை கண்காணித்ததோடு, சித்திரவதையும் செய்தார். ஆஸ்டினை சந்திக்க விடாமல் செய்தார். மீண்டும் வெளிநாடு செல்லும் முடிவை என் கணவர் தள்ளி வைத்ததால், அவரை விட்டு பிரிய முடிவு செய்து, யோசனை செய்து கொண்டிருந்த போது, மதுரையில் அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட செய்தி வெளியானது.
எனவே, இதில் என் கணவரை சிக்க வைக்க முடிவு செய்தோம். எனது போனை போலீசார் வாங்கிய போதே, நாம் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து விட்டது. நான் பெரிய துரோகம் செய்து விட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications