போதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய இளம்பெண் பிடிப்பட்டார்
நாகர்கோவில்: நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி சென்று சாலையில் நடந்து சென்ற கொத்தனார் மீது மோதிய இளம்பெண்ணை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை செய்கிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவில் ஒழுகினசேரியில் இருந்து காரில் கோட்டார் நோக்கி சென்றார். காரை அங்கும், இங்குமாக ஒழுங்கற்ற நிலையில் ஓட்டி சென்ற இளம்பெண், சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதினார்.
இதில் நடந்து சென்றவர் காரின் முன் கண்ணாடி மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்தது. நடந்து சென்றவரும் காயமடைந்தார். ஆனால் காரை ஓட்டி சென்ற பெண் நிறுத்தாமல், காரை வேகமாக ஓட்டி சென்றார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் காரை நிறுத்துமாறு கூறி பைக்கில் துரத்தி சென்றனர்.
மீனாட்சிபுரம் அருகே வந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரும், வாலிபர்களோடு சேர்ந்து காரை துரத்தினர். சவேரியார் கோவில் அருகே கார் சென்றபோது போலீசார் காரை சுற்றி வளைத்தனர்.
சாலையில் நடந்து வந்தவர் மீது மோதியது குறித்து இளம்பெண்ணிடம் போலீசார் கேட்ட போது, அவர் போதையில் உளறினார். இதனையடுத்து இளம்பெண் உடனடியாக ஆசாரிபாளையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இளம்பெண் போதையில் இருப்பதாக மருத்துவ அறிக்கை அளித்தனர்.
போலீஸ் விசாரணையில் விபத்தில் காயமடைந்தவர் அதே பகுதியில் கொத்தனர் வேலை செய்வது தெரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications