அத்வானியை கொல்ல சதி-தலைமறைவாக உள்ள பக்ருதீனுக்கு இமாம் அலி கூட்டாளிகள் அடைக்கலம்?
தென்காசி: அத்வானியை பைப் குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட பக்ருதீனுக்கு இமாம் அலியின் கூட்டாளிகள் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்ய மதுரை அருகே ஆலம்பட்டி பாலத்தில் பைப் குண்டு வைக்கப்பட்டது. இவ்வழக்கில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சிம்மக்கல்லைச் சேர்ந்த இஸ்மத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களை 4 நாள் காவலில் எடுத்த போலீசார் சின்னசொக்கிகுளத்தில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் பெரும்பாலான கேள்விக்கு தெரியாது என்றே இவர்கள் பதில் அளித்துள்ளனர். எனினும் சில முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. இந்த சதி செயலில் மூளையாக செயல்பட்டது இமாம் அலியி்ன் நெருங்கிய நண்பரான பக்ருதீன் என்று தெரிய வந்துள்ளது.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது,
சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் பெயர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை கூற இருவரும் மறுக்கின்றனர். இவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும், மற்ற விஷயங்கள் பற்றி தெரியாது என்றும் தெரிவித்தனர். அத்வானி மதுரை வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பக்ருதீன் என்பவர் இந்த சதி செயலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவருடன் பிலால் மாலிக் என்பவரும் இருந்துள்ளார். வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டன, இந்த சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு, பக்ருதீனுக்கு எங்கிருந்து உதவிகள் வந்தன என்பது குறித்த சில தகவல்கள் மட்டும் தெரிவித்தனர் என்றனர்.
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி போலீசிடம் இருந்து ஒருமுறை தப்பிய வழக்கில் 32 பேர் சிக்கினர். இவர்களில் பலர் தற்போது தமிழகத்தில் பல ஊர்களில் வசிக்கின்றனர். மிகப்பெரிய சதியில் பக்ருதீன் ஈடுபட்டுள்ளது மூலம் இமாம் அலியின் கூட்டாளிகளை அவர் அணுகியிருப்பார் என போலீசார் நம்புகின்றனர். இதனால் இமாம் அலி வழக்கில் சிக்கிய அனைவரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவர்கள் யாராவது பக்ரூதீனுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் இந்த சதியிலும் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீசார் சந்தேக்கின்றனர்.
இதே போல தென்காசியில் நகர இந்து முன்னணி நிர்வாகி குமார் பாண்டியன் கொலையில் கைது செய்யப்பட்ட ஹனிபாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் மதுரையில் பக்ருதீன் அடைக்கலம் கொடுத்திருந்திருக்கிறார். இதனால் ஹனிபா தற்போது பக்ருதீனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஹனிபாவைத் தேடி தென்காசியிலும் தனிப்படை முகாமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications