பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது! - சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முன்தினம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 80 காசுகள் உயர்த்தின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கேரள உயர்நீதிமன்றம் பகிரங்கமாக மத்திய அரசை கண்டித்துள்ளது.
பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜி 20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதன்படி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தற்போதைய விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையில் மாற்றம் செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
விலைவாசி உயர்வு
பணவீக்கம் அதிகரித்து இருப்பது பற்றி கேட்டபோது, உணவு தானியங்களின் விலை ஓரளவு நிலையாக இருப்பதாகவும் காய்கறிகள், முட்டை, மீன் போன்றவற்றின் விலையில்தான் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதாகவும் கூறினார். பொருட்களின் சப்ளையை விட தேவை அதிகரிப்பதால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை ஆய்வு செய்யும் போது, ஆண்டு நிகர வருமானம் 8 சதவீதம் உயர்ந்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான்
மிகவும் சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழங்கி இருப்பதை வரவேற்பதாக பேட்டியின் போது கூறிய மன்மோகன்சிங், இந்த அந்தஸ்தை பாகிஸ்தான் முன்பே வழங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மிகவும் சாதகமான நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வழங்கி விட்டதாகவும், ஆனால் அப்படி ஒரு அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications