2வது நில மோசடி வழக்கிலும் எதியூரப்பாவுக்கு ஜாமீன்கிடைத்தது- வெளியே வருகிறார்
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு 2வது நில மோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்து விட்டது. இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
பெரும் இழுபறிக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 15ம் தேதி எதியூரப்பா, லோக் ஆயுக்தா கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். ஆனால் அடுத்த நாளே நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அவருக்கு இதயம் நன்றாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறியதால் மீண்டும் சிறைக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டார். ஆனால் வேறு சில பிரச்சினைகளை அவர் கூறியதால் அரசு மருத்துவமனைக்கு வண்டியைத் திருப்பி அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் வேண்டும் என்றே இவ்வாறு செய்கிறார் எதியூரப்பா என புகார்கள் கிளம்பவே மருத்துவமனை வேண்டாம் என்று சிறைக்குத் திரும்பினார் எதியூரப்பா.
அவர் மீது மொத்தம் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், 3 வழக்குகளில் அவர் முன்ஜாமீன் வாங்கி விட்டார்.
நவம்பர் 3ம் தேதி ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இன்று 2வது வழக்கிலும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து எதியூரப்பா சிறையிலிருந்து வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications