கூடங்குளம்: போராட்டக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல்: உடைகிறது போராட்டக்குழு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் குழுவில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மக்கள் அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர் குழு நேற்று தமிழக அரசி்ன் 6 பேர் கொண்ட குழுவை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டதிற்கு மாநில அரசின் குழுவில் இடம்பெற்றிருந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் வரவில்லை.
மாறாக அவர் தனது உதவியாளர் பாதிரியார் சத்தியநேசன் மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜுக்கு கடிதம் அனுப்பினார். இதனால் போராட்டக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மாநில அரசின் குழுவில் இருந்தும், போராட்டக்குழுவில் இருந்தும் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அதில் நாட்டம் இல்லை. மதபோதகர் பணியில் இருக்கும் நான், அணுசக்தி துறையில் தொடர்புடைய நிபுணர் அல்ல. எனவே, இந்த விஷயத்தில் என் ஒப்புதலின்றி, என் பெயர், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அணு உலை தொடர்பான தமிழக அரசின் கமிட்டியில் நான் இடம் பெற மாட்டேன். இப்பிரச்னை தொடர்பான கமிட்டி கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் அவர் மாதாந்திர பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றதால் தான் ஆலோசனை கூட்டத்திற்கு வரமுடியாமல் போனது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் இருந்து தொலைவில் உள்ள சேரன்மகாதேவி பாதிரியாக ஜேசுராஜன் என்பவர் போராட்டக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, அணு உலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று முடிந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது.












Click it and Unblock the Notifications