அடுத்த முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அரசுக்கு ஆதரவு வாபஸ்: மமதா பல்டி!
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறப் போகிறேன், இதையெல்லாம் ஏற்கவே முடியாது, பொறுக்க முடியாது என்று படு வேகமாக பேசி வந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தற்போது அப்படியே ஜகா வாங்கி விட்டார். அடுத்த முறை உயர்த்தினால் நிச்சயம் ஆதரவு வாபஸ் என்று கூறி தனது எதிர்ப்பை அப்படியே காலில் போட்டு மிதித்து விட்டார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முக்கியக் கட்சிகளில் ஒன்று மமதாவின் திரினமூல் காங்கிரஸ். திரினமூல் காங்கிரஸுக்கு திமுகவை விட அதிகம் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சி திமுகவைக் கூட கண்டு கொள்ளாமல் ஓரம்கட்டி வைத்துள்ளது. திரினமூலை மட்டும் தாஜா செய்து வந்தால் போதும், ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி வண்டியை, ஸ்மூத்தாக ஓட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பு காங்கிரஸுக்கு.
இதை நன்கு உணர்ந்துள்ள மமதாவும் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சினையைக் காரணமாக வைத்து காங்கிரஸையும், மத்திய அரசையும் மிரட்டி தனக்கும், தனது கட்சிக்கும், தனது மாநிலத்திற்கும் தேவையானதை சாதித்துக் கொள்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம் முதல் ஆளாக படு வேகமாக குரல் கொடுப்பார் மமதா. ஆனால் அதே வேகத்தி்ல தனது எதிர்ப்பைக் கைவிட்டு விடுவார்.
அதே போலத்தான் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்தும் படு ஆவேசமாக குரல் கொடுத்தார். இந்த முறை சற்று ஓவராகவே குரல் கொடுத்தார். ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று அவர் போட்ட போட்டால் உண்மையிலேயே பயந்து போனது காங்கிரஸ்.
இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் குழுவை சந்திக்க பிரதமர் விருப்பப்பட்டார். அதன்படி நேற்று அக்கட்சியின் எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்துப் பேசியது. அப்போது தங்களது மாநிலத்திற்குத் தேவையானவை குறித்த ஒரு பட்டியலை திரினமூல் காங்கிரஸ் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மமதா பானர்ஜி கூறுகையில், எங்களது கட்சி எம்.பிக்கள் பிரதமரை சந்தித்துப் பேசினர். பெட்ரோல் விலை உயர்வால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை அவரிடம் விளக்கினர்.
அடுத்து காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எங்களது எம்.பிக்கள் பிரதமரிடம் கேட்டனர். அப்படியா, அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது. ஆனால் விலை உயர்வு இருக்காது என்று அவர் கூறவில்லை.
எனவே இந்த நிமிடம் முதல் நாங்கள் அரசை கூர்ந்து கவனிக்கப் போகிறோம். அதன் போக்கைக் கண்காணிக்கப் போகிறோம். மறுபடியும் எதையாவது விலை உயர்த்தினால் நிச்சயம் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம். அதில் சந்தேகமே இல்லை. அவசரப்பட்டு எந்த முடிவையும் நாங்கள் இப்போது எடுக்க விரும்பவில்லை. ஆனால் அடுத்த முறை விலை உயர்வு இருந்தால் நாங்கள் அரசுடன் இருக்க மாட்டோம் என்றார் மமதா. இதன் மூலம் தனது எதிர்ப்பை தற்போது கைவிட்டு விட்டார் மமதா.
மக்கள் இப்போது கஷ்டப்படட்டும், அடுத்த முறை கஷ்டப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாரா மமதா...?












Click it and Unblock the Notifications