வள்ளியூரில் நகைக் கடையை உடைத்து ரூ. 42 லட்சம் தங்க, வெள்ளி நகைகள் கொள்ளை
வள்ளியூர்: வள்ளியூரில் நகைக் கடையின் பக்க கதவை உடைத்து பல லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வள்ளியூர் முருகன்பாதை தெருவைச் சேர்ந்தவர் ராஜ். அவர் வள்ளியூர்-ராதாபுரம் மெயின்ரோட்டில் நகைக் கடை வைத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறார். நகைக் கடையி்ன் பின்புறம் காட்டுப் பகுதியாகும். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்காது. ராஜ் நகைக் கடை அருகே ஏராளமான நகைக் கடைகளும் உள்ளன.
இந்த நிலையில் ராஜ் நகைக் கடையின் பின்புறம் கடந்த சில நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். கடையின் பின்புறம் உள்ள முட்செடிகளை அகற்றுவது மற்றும் பின்புறம் இரும்பு கதவுகள் அமைப்பது என பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை இரும்புக் கதவுகள் அமைக்கும் பணி முடிந்ததும் தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து ராஜ் மற்றும் கடை ஊழியர்கள் பின்புறமுள்ள மரக்கதவு மற்றும் இரும்புக் கதவுகளை மூடினர். மேலும் மர்ம நபர்கள் யாராவது கதவை திறக்காமல் இருக்க கதவுகளின் பின்புறம் வெயிட்டான பொருட்களை போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். இதையடுத்து கடைகளில் உள்ள தங்கம், வெள்ளி பொருட்களை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டினர்.
பின்னர் முன்பக்க ஷட்டர் கதவை மூடி ராஜ் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இன்று காலை ராஜ் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க கதவுகள் திறந்து கிடந்தது. தடுப்புகளும் கீழே விழுந்து கிடந்தன. இதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தங்கம் வெள்ளி நகைகள் இருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதிலிருந்த நகைகள் திருட்டு போயிருந்தது. அதில் 80 பவுன் தங்க நகை, 35 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.42 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.