வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்கமுடியாது- அன்னா குழு மீது சோனியா பாய்ச்சல்
ரிஷிகேஷ்: அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் - அதுவும் காட்டமாக. வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியெடுத்த நேரத்தில் சோனியா காந்தி எதுவும் பேசவில்லை. மேலும் அவருக்கு உடல் நலமும் சரியில்லை. அமெரிக்காவில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் சரியான பின்னர் முதல் முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக அவர் வரவில்லை. மாறாக தனது பேச்சை எழுத்துப்பூர்வமாக அவர் அனுப்பியிருந்தார்.
சோனியா காந்தியின் பேச்சை காங்கிரஸ் தலைவர் சத்பால் மகராஜ் வாசித்தார்.
அதில் சோனியா கூறியிருப்பதாவது:
லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று பிரதமரே உறுதியளித்து விட்டார். அதற்குப் பின்னரும் ஏன் அமளி துமளியை எழுப்புகிறார்கள் என்று புரியவில்லை.
வெறும் பேச்சுக்களால் ஊழலை ஒழிக்க முடியாது.தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வர நான்தான் பாடுபட்டேன், தொடக்க நடவடிக்கைகளை எடுத்தேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அரசு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளது. அதைக் கடைப்பிடிக்க கடுமையாக முயன்று வருகிறது. பிறகு ஏன் சத்தம் எழுப்புகிறார்கள்? என்று தனது உரையில் கூறியிருந்தார் சோனியா.
ராசா ஏன் சிறையில் இருக்கிறார்?-சோனியாவிடம் விளக்கம் கேட்கும் பாஜக
சோனியா காந்தியின் பேச்சு குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர்கள் கூறுகையில், சோனியா காந்தி பேசுவது இருக்கட்டும். அவரது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அவர் விளக்க வேண்டும். ராசா ஏன் சிறையில் இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். ப.சிதம்பரத்தை இதுவரை ஏன் விசாரணைக்கு உட்படுத்தாமல் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications