திருச்சியில் விமான மோதல் தவிர்ப்பு சம்பவம்- விசாரணை தொடங்கியது-2 விமானிகள் விடுவிப்பு
டெல்லி: திருச்சியில் இரண்டு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதவிருந்து கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக 2 விமானிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி விமானநிலையத்தில் இறங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் ஐசி 671 விமானமும் திருச்சியில் இருந்த கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் 9டபுள்யூ 4758 என்ற விமானமும் திருச்சி விமானநிலையத்தின் வான் பகுதியில் நேருக்கு நேராக மோத இருந்தது.
கடைசி நேரத்தில் மோதல் தவிர்க்கப்பட்டது. இதனால், இரண்டு விமானங்களிலும் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் விசாரணை மேற்கொண்டுள்ளது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தவர்களுக்கும், விமானிகளுக்கும் இடையே நடைபெற்ற முக்கிய உரையாடல் பதிவான டேப் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை பணியாளர்களிடம் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் சம்பவத்திற்கு காரணமான இரண்டு விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications