ஆலம்பட்டி பைப் வெடிகுண்டு வழக்கு-'போலீஸ்' பக்ருதீனை ஆஜர்படுத்தக் கோரி வழக்கு
சென்னை: ஆலம்பட்டியில் பைப் வெடிகுண்டு வைத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீனை போலீஸார் பிடித்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.
இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.
வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.
எனவே பக்ருதீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.