அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது: வைகோ
மதிமுக மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்திடவும், கிளைகள் இல்லாத ஊரில் கிளைக் கழகம் அமைக்கவும், இந்தப் பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் நிறைவு செய்திட வேண்டும்.
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புரத்தில் இருந்து அகற்றும் தமிழக அமைச்சரவை முடிவு மிகவும் கண்டனத்துக்குரியது. அண்ணா புகழுக்கு பெருமை சேர்க்கின்ற இந்த நூலகத்தை மாற்றக் கூடாது.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி 17ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
- உர விலையை கட்டுப்படுத்தக் கோரி நவம்பர் 18ம் தேதி தஞ்சையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
- கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து தென் தமிழகத்தை பாதுகாக்கின்ற வகையில் அணு மின் நிலைய பணிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.