கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறை அருகே ரூ.18.5 லட்சம் செலவில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம்

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கன்னியாகுமரி, பிள்ளைதோப்பு, கொட்டில்பாடு, கீழமணக்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதையடுத்து மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை அருகே சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அரசின் கடல்சார் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக கன்னியாகுமரி படகுத் துறையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் 10 மீட்டர் ஆழத்துக்கு கான்கிரீட் பிளாக்குகள் போடப்பட்டன. இதுவரை 2 டன் எடையுள்ள பிளாக்குகள் கடலுக்குள் போடப்பட்டுள்ளன. இந்த பிளாக்குகள் இணைக்கப்பட்டு அதன் மேல் சுனாமி எச்சரிக்கை மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நவீன கருவிகள் பொருத்தப்படும்.
இதையடுத்து கடல் அலையின் உயர் மட்டம், கடல் நீர் மட்டம் குறைதல், அலையின் வேகம், நீரின் தன்மை, சுனாமிக்கான அறிகுறிகள் ஆகிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் இம்மையம் முழுவீச்சில் செயல்படத் தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications