பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்டம்
சென்னை: வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திமுக அரசு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்து வந்தது. புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி மொத்தம் 1,743 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும் வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும். பொதுப்பிரிவில் 31 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் சம்பள விகிதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை இருக்கும்.இதில் அனைத்து பிரிவிலும் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பதவி மூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://www.trb.tn.nic.in பார்க்க முடியும். விண்ணப்பதாரர்கள் 01.07.2011 தேதியின்படி 57 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தொடக்க கல்வித் துறை இயக்குநரகம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில் பணியமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் கோர முடியாது. இந்த நியமனம் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications