'அமைதிக்கான அடமானங்கள்': புலிகளை ஒழிக்கவே இந்தியா விரும்பியது - நார்வே குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

India wanted LTTE 'put in its place'
நார்வே: சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவும் ஒரு பிரதான காரணம், என நார்வே குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை அரசின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு, நார்வே அரசின் சார்பில் போரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, 'அமைதிக்கான அடமானங்கள்' (Pawns of Peace) என்ற தலைப்பிலான அறிக்கை, ஆஸ்லோவில் வெளியிடப்பட்டது.

புலிகளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று நார்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நார்வே அரசின் சார்பாக தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, 'அமைதிக்கான அடமானங்கள்' (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-2004 ல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. அப்போது வாஜ்பாய் ஆட்சிக் காலம். புலிகளுக்கு மறைமுகமாக இந்திய ஆதரவு இருந்தது.

ஆனால் 2004ல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு, தமிழர்களின் விருப்பங்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே அரசாங்கம் தமிழருக்கு எதிராக மேற்கொண்ட ராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சந்திப்புகளில் நார்வேயை 'புலிகளின் நண்பர்' என்று இந்தியா விமர்சித்ததாகவும், 'புலிகளை அப்படியே நிறுத்திவிட வேண்டும்' என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால்தான் இலங்கை படைகளுக்கு இந்தியா ரேடார்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. இலங்கைக்கு தாக்குதல் போர்த் தளவாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை டெல்லி கடைப்பிடித்தாலும் வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்முதல் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, இலங்கைக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

கடந்த 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப் புலிகளால் தற்கொலை படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் மனைவி சோனியா காந்தி, இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு டெல்லி கோரிய போதிலும், ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகக் குறைந்தளவே ஆர்வம் காட்டியது. போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியதா என்பது சந்தேகமாகவே இருந்தது.

சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007ல் நார்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் டெல்லி அதனை நிராகரித்துவிட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் அப்போதே தெளிவாகியது.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யார் பதவிக்கு வந்தாலும் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை இலங்கைக்கு இருந்தது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புக் கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகவல் புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்று நார்வேயின் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+