நவீன வசதிகளுடன் கூடிய மதுபான பார்களை திறக்க தமிழக அரசு முடிவு
சென்னை: தமிழக முழுவதும் 'எலைட் ஷாப்' என்ற பெயரில் பிரம்மாண்டமான மதுபான பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள குடிமகன்களை திக்குமுக்காட வைத்தது. டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசு ஆண்டுத் தோறும் அதிகளவில் வருமானம் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.14,965 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இதனை மேலும் அதிகரித்து ரூ.20,000 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய ஏசி பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'எலைட் ஷாப்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட உள்ள டாஸ்மாக் பார்களுக்கான இடங்களை டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண பார்களிலேயே தினமும் 'குடி'மகன்களின் கூட்டம் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக வசதிகளுடன் கூடிய 'எலைட் ஷாப்' பார்களில் மதுபான பிரியர்கள் வருகைக்கு குறைவு இருக்காது. எனவே இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 'எலைட் ஷாப்கள்' குறித்த செய்தி மதுபான பிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.