ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பண மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்து, 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவான்மியூர், பிள்ளையர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், என் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார். இதேபோல முனியாண்டி தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு வேலை வாங்கி தருவதாக பல நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார், என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ராதிகா கூடுதல் துணை ஆணையாளர் மகேஷ்வரன் மற்றும் உதவி ஆணையாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிய முனியாண்டி, தமிழகம் முழுவதும் சுமார் 100க்கு மேற்பட்ட இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது.
மேலும் சுழல் விளக்கு பொருத்திய காரில் சென்றுள்ளார். மத்திய அரசு முத்திரையை பயன்படுத்தி மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து முனியாண்டியை போலீசார் கைது செய்து தைதாப்பேட்டை 11-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தார். சென்னை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications